ஈஸ்டர் பெருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு
Apr 1 2018 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏசுகிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை சாந்தோம் புனித தோமையார் தேவாலயத்தில் மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஏசு உயிர்தெழும் நிகழ்வு தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சென்னை மடிப்பாக்கம் அன்னை தெரஸா ஆலயத்தில் பங்கு தந்தை தாமஸ் பிரேம் குமார், அருட்தந்தை ஐசக் ஆகியோர் தலைமையில், ஈஸ்டர் பிராத்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனையில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஏசு உயிர்தெழுவதை உணர்த்தும் வகையில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடக்க நிகழ்ச்சியாக பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடைபெற்றது. இதில்ஏசு உயிர்தெழுவதை உணர்த்தும் வகையில் 'பாஸ்கா ஒளி' ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி ஜெபம் செய்தனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் ஏசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்ரூபமாக நடத்தப்பட்டது. பின்னர் ஈஸ்டர் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாநகரில் உள்ள சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம் ஐடா ஸ்கடர் நினைவாலயம் மற்றும் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.