கேரளாவில் மலையாள புத்தாண்டாம் விஷு பண்டிகை கொண்டாட்டம் : தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள், கேரள பாரம்பரிய முறைப்படி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு
Apr 15 2018 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தில் மலையாள புத்தாண்டாம் விஷு பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள், கேரள பாரம்பரிய முறைப்படி பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
கேரளாவில் இன்று மலையாள புத்தாண்டாம் விஷு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களும், பெண்களும் புத்தாடை அணிந்து, கோவில்களுக்குச் சென்று, கனிகாணும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோவிலில் கேரள பாரம்பரிய முறைப்படி, சிறப்பு பூஜைகளும் கனிகாணும் நிகழ்சிகளும் நடைபெற்றன. இதில் மலையாள மொழி பேசும் மக்கள் உட்பட ஏராளமானோர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பூஜைகளில் படைக்கப்பட்டு இருந்த கனிகாணும் நிகழ்சியை பக்தர்கள் பார்த்து வணங்கிச் சென்றனர். இதனால் இந்த ஆண்டு முழுவதும் சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கோவையை அடுத்த சித்தாப்புதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் விஷு பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கோவில்களில் கை நீட்டம் வழங்கப்பட்டதைப் போல வீடுகளில் பெரியவர்கள், சிறுவர்களுக்கு காசு, பணத்தை கை நீட்டமாக கொடுத்தனர். மலையாள பெண்கள் பாரம்பரிய முறையில் புத்தாடை அணிந்து கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டனர். உற்றார் உறவினர்களுக்கு உற்சாகமாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.