அட்சய திருதியை தினத்தையொட்டி கும்பகோணத்தில் 12 வைணவ ஆலயங்களில் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Apr 18 2018 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அட்சய திருதியை தினத்தையொட்டி கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புகழ்ப்பெற்ற 12 வைணவ ஆலயங்களில் இருந்து கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலாவாக வந்து ஒரே இடத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில், கும்பகோணத்தில் கருட சேவை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஸ்ரீ சாரங்க பாணி ஸ்வாமி, ஸ்ரீ சக்கரபாணி ஸ்வாமி, ஸ்ரீ ராமஸ்வாமி உள்ளிட்ட கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 12 வைணவ ஆலயங்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவாக வந்து பெரிய தெருவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கும்பகோணம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அட்சய திருதியையொட்டி திருச்சியில் உள்ள நகைக் கடைகளில் ஏராளமான புதிய தங்க மற்றும் வைர நகைகள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளையும் நகைக்கடைகள் அறிவித்துள்ளன. இன்று தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் அட்சய திருதியை என்பதால், பெண்கள் தங்க நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள இல்லத்தரசிகள் தாங்கள் சேர்த்த பணத்தில் நகை வாங்குவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.