திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அபிஷேகமூர்த்தி சிலை ஊழல் : இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற 2 அதிகாரிகள் கைது
May 14 2018 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அபிஷேகமூர்த்தி சிலை ஊழல் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நவபாஷாண மூலவர் சிலை முன்பாக, கடந்த 2004ம் ஆண்டு மூன்றேகால் அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன அபிஷேகமூர்த்தி சிலை வைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அச்சிலை அகற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த அபிஷேகமூர்த்தி சிலை தயாரிக்கப்பட்டதில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றது ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் மற்றும் தடுப்புப்பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, பின்னர் மீண்டும் சிலை கடத்தல் மற்றும் தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், சென்னை ஐ.ஐ.டி உலோகவியல் நிபுணர் முத்தையன் குழுவினர் கடந்த 2 நாட்களாக பழனியில் முகாமிட்டு சிலைகளை ஆய்வு செய்தனர். இதில், சில சிலைகளில் கலவைகள் மாற்றம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அபிஷேகமூர்த்தி சிலை வைக்கப்பட்டபோது பழனிக்கோயில் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.