ஆரோவில் வர்ணமுத்த மாரியம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் தலையில் மிளகாய்தூள் கரைசல் அபிஷேகம்
May 28 2018 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆரோவில் அருகே உள்ள இடையன்சாவடி கிராமத்தில் உள்ள வர்ணமுத்த மாரியம்மன் கோயில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் மிளகாய்தூள் கரைசல் அபிஷேகம் உள்பட 108 அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இடையன்சாவடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வர்ணமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 23-ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 5-ம் நாள் நிகழ்ச்சியாக, அம்மனுக்கு 108 அபிஷேகங்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிக்காக கிராமத்தில் உள்ள 3 பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் இருந்து வந்தனர். அந்த பக்தர்கள், கோவில் முன்பு உள்ள மேடையில் அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு எண்ணெய், வாசனை திரவியங்கள், பழங்கள், அபிஷேகப் பொருட்கள், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 108 பொருட்களைக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் கடைசியாக மிளகாய் தூள் கரைசல் அவர்களுக்கு 3 கைப்பிடி அளவுக்கு கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் குடித்த பின்னர் அவர்களின் தலையில் மிளகாய்தூள் கரைசல் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் வேப்பிலை கரைசல் ஊற்றப்பட்டதுடன் அபிஷேகங்கள் நிறைவடைந்தன.
அதனைத் தொடர்ந்து அந்த பக்தர்கள் 3 பேரும் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் மூலம் செடல் உற்சவம் தொடங்கப்பட்டது. இந்த விழாவில், இடையன்சாவடி, ஆரோவில், வானூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.