தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
May 29 2018 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் திருவிழாக்களில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் ஸ்ரீகுபேரன், பஞ்சபாண்டவர்கள் வணங்கி அருள்பெற்ற பழமைவாய்ந்த பிரகன்நாயகி அம்பாள் உடனுறை சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வைகாசி விசாகத் பெருவிழாவையொட்டி, தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் முருகபெருமானுக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. விரத மிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் அருகே பாலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பரிமள மாரியம்மன் கோயிலில் புதிய தேர் வடிவமைக்கும் பணி நிறைவடைந்ததையொட்டி வெள்ளோட்டம், நடைபெற்றது. கிராம பொதுமக்கள் ஊர்வலமாக வந்து அருள்மிகு பரிமள மாரியம்மனுக்கு பால், உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேரை பக்தர்கள் இழுத்து அம்மனை வழிபட்டனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா, நெடுங்கூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீமிதி திருவிழா வெகுசிறப்புடன் நடைபெற்றது. தீமிதித்தல் மற்றும் அக்னிசட்டி எடுத்தல், அலகுகுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வில் பங்கேற்று பத்தர்கள் தமது நேர்த்தியை நிறைவேற்றினர். இந்த நிகழ்ச்சியில் நெடுங்கூர், நெய்க்குளம் பாடாலூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வழிப்பாடு செய்தனர்.
கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் அழுகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற திருத்தேர் விழாவில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இத்திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கமலநாயகி சமேத நீலமேகம்பெருமாள் கோயிலில், வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நீலமேகப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர் பின்னர் கோயிலை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சக்தி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சந்து முத்துமாரியம்மன் ஆலயத்தில், வைகாசி மாதத்தையொட்டி பால்குட அபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள ஆனந்தமுத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்து வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களின் வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர். இதில் எராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.