தஞ்சையில் 4 ராஜ வீதிகளில் 24 பெருமாள்கள் கருடசேவை : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jun 5 2018 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சையில் 4 ராஜ வீதிகளில் நேற்று 24 பெருமாள்கள் கருடசேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் 3-வதாக விளங்கும் மேலசிங்க பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களில் கருடசேவை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, ராமானுஜதர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி 84-வது ஆண்டாக இந்த ஆண்டு கருடசேவை நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 18 பெருமாள் கோவில்கள் மற்றும் ஏனைய 6 கோவில்கள் என மொத்தம் 24 கோவில்களில் இருந்து கருடவாகனத்தில் பெருமாள்கள் எழுந்தருளி அவரவர் கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலையை வந்தடைந்தனர்.
24 பெருமாள்களையும் பக்தர்கள் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசமடைந்தனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோவில்களை சென்றடைந்தனர்.