திண்டுக்கல் பழனி மலைக்கோயில் அபிஷேகமூர்த்தி சிலை தயாரிப்பில் ஊழல் : கும்பகோணம் நீதிமன்றத்திற்கு சிலையை கொண்டு சென்ற போலீசார்
Jul 11 2018 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயில் அபிஷேகமூர்த்தி சிலை தயாரிப்பில் நடைபெற்ற ஊழலைத் தொடர்ந்து, அச்சிலையை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு மூலவர் தண்டாயுதபாணி சிலை முன்பு, மூலவரை மறைக்கும் வகையில், சுமார் ஒன்றரை அடி உயர ஐம்பொன்னால் ஆன அபிஷேகமூர்த்தி சிலை நிறுவப்பட்டது. பக்தர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தச் சிலை அகற்றப்பட்டது. இரட்டைப் பூட்டு அறையில் வைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு ஒருகால பூஜை மற்றும் நடைபெற்று வந்த நிலையில், இச்சிலை தயாரிப்பில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா, உதவி ஆணையர் புகழேந்தி, நகை சரிபார்ப்பு அலுவலர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அபிஷேகமூர்த்தி சிலையை கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போலீசார் நேற்று பழனி வந்தனர். சிலையை கொண்டு செல்வதற்காக சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இன்று காலை சிலை எடை பார்க்கப்பட்டு, விஞ்ன் மூலம் அடிவாரம் கொண்டுவரப்பட்டது. பின்னர் போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறை வட்டாட்சியர் சரவணன் முன்னிலையில், சிலை கடத்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வசம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அபிஷேகமூர்த்தி சிலை, கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.