பிரசித்திபெற்ற புரி ஜெகன்நாதர் ஆலய தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Jul 14 2018 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் ஆலய தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒடிஷா மாநிலத்தில் நடைபெறும் புரி ஜெகன்னாதர் தேரோட்டம் மிகவும் தொன்மையானதாகும். ஜெகன்னாதர், சகோதரர் பலபத்திரர் மற்றும் சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, Balagandi Chaka என்ற இடத்தில் அமைந்துள்ள Gundicha கோவிலுக்குச் செல்லும் நிகழ்வாக இந்த ரத யாத்திரை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த தேரோட்ட விழா, இன்று காலை தொடங்கியது. மூவரின் திருமேனிகள், ரதங்களில் எழுந்தருளச் செய்து, தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக் கணக்கானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, ஏழாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரதம் செல்லும் வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ரதத்தின் மீது ஏறுவதும், ரதத்தில் உள்ள தெய்வத் திருமேனிகளைத் தொடருவதும் சட்டப்படி குற்றம் என்றும், அவ்வாறு நடந்துகொண்டால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஜெகன்னாதர் கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. தேரோட்டத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, தனது காணிக்கைகளையும் கோவிலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே, குஜராத் மாநிலம் அஹமதாபாத்திலும் ரத யாத்திரை இன்று தொடங்கியது. இதனையொட்டி, அங்குள்ள ஜெகன்னாதர் கோவிலில் நடைபெற்ற மங்கள ஆரத்தி நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. அமித்ஷா கலந்துகொண்டார். அஹமதாபாத்திலும் ரத யாத்திரை ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.