கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
Jul 24 2018 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை அம்மன் அழைப்பு நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து தலைமை பூசாரி குண்டத்தை வலம் வந்து பூஜைகள் செய்த பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.