தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஆடித்திருவிழா : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
Jul 28 2018 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பழைமை வாய்ந்த மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில், கிரகண நேரத்தில் நள்ளிரவில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காவிரி ஆற்றின் துலாக்கட்டத்தில் ரிஷப தீர்த்தத்தில், இரவு 2மணிக்கு அஸ்திரதேவருக்கு அபிஷேகமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து, ஸ்நபன ஹோமம் எனப்படும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அதில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மஹாதீபாராதனை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மணலியை அடுத்த மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் சுமந்தும் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் கோவில்களுக்கு சென்றடைந்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் விருத்தாசலம் எம்.ஜி.ஆர்.நகர் வண்ணமுத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காப்புகட்டிக் கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இக்கோவிலில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி அருள்மிகு பிரகதீஸ்வரர் சமேத பெரிய நாயகி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் அரியலூர் கைலாசநாதர் திருக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆடி மாதம் இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு கரூர் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு 38 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக ஸ்ரீ வேம்புமாரியம்மனுக்கு நான்குகால பூஜை நடைபெற்றது. இதில் பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆடிதபசு காட்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தென்காசியில் ஆடி தபசு காட்சி நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு விழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.