ஆடிகிருத்திகையையொட்டி, முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
ஆடி கிருத்திகையையொட்டி, அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகப்பெருமான் கோயிலில், அதிகாலையில் மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து இரவு தங்க மயில் மற்றும் தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிகள் திருக்கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கோவில் அடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கையில் மூன்று நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக துவங்கியது. வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான், மின்னொளியில் அலங்கரிப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மலர்காவடி, சந்தன காவடி, பால்காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்தும், அலகுகள் குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடிமாதத்தில் வரும் கார்த்திகை நாளில், முருகப்பெருமானை வேண்டி பக்தர்கள் பால்காவடி எடுத்தும் வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, திருச்சி மேலப்புலிவார்ரோடு பகுதியில் எழுந்தருளியுள்ள வள்ளி தேவசேனா முருகன் திருக்கோயிலில், 300-க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி எடுத்துவந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, திருச்சி வயலூர் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை வழிபாடுசெய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில், ஆடி கிருத்திகையையொட்டி, அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வேலுடையான்பட்டு பகுதியில் எழுந்தருளும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திட்டக்குடி அடுத்துள்ள வாகையூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடிமாதத்தையொட்டி, 108 பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் 400&க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
இதனிடையே, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயிலில், ஆடிப்பூர கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொடி பட்டம் திருக்கோவிலை வலம்வந்த பின்னர், கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடிப் பட்டம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்தகொண்டு தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம். வாலாஜபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி கோயிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீகார்த்திகை குமரனுக்கு விபூதி அபிஷேகமும், ஆறுமுக ஹோமம் என்கிற சத்ரு சம்ஹார ஸ்கந்த ஹோமமும் நடைபெற்றது. இதனையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
திருப்பாகுட்டை வட்டப்பாறை அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டு நடைபெற்று, தொடர்ந்து பெண்கள் மேளதாளம் முழங்க பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மணலி அடுத்த மாத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீ சர்வசக்தி மாரியம்மன் கோயிலில், தீமிதி திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம் நாளான நேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி, தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சிறுவர்கள் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 22-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து கரகம் சுமந்தும், கைகளில் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.