கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவாலயம் புதுப்பிக்கும் பணிக்கு எதிர்ப்பு : பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு
Aug 6 2018 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கடந்த 52 ஆண்டுகளாக கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனை செய்து வரும் தேவாலயத்தை புதுப்பிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி ஊர் பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் அருகே உள்ள இலந்த நகரில் இரச்சணிய சேனை பிரிவு தேவாலயம் உள்ளது. 1966-ஆம் ஆண்டு இப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த ஆலயம் கடந்த ஒகி புயலில் சேதமடைந்தது. தற்போது இந்த தேவாலயத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஆலயம் கட்டக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் ஒன்றுமையை பிரித்து மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டிய மக்கள், பிரிவினையை தூண்ட நினைபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.