ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஐந்துகண் பாலம் அருகேயுள்ள ஜெயசக்தி பீடம் ஸ்ரீகாளியம்மன் திருக்கோயிலில், அம்மனுக்கு 50 கிலோ திராட்சைப் பழம் அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
சிவகங்கை அருகே உள்ள ஆயுதப்படை மகாமாரியம்மன் ஆலயத்தில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுமகங்கலி பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக ஆலயம் முன் அமைக்கப்பட்ட பந்தலில் முளைப்பாரியுடன் அம்மன் மகாமாரியம்மன் எழுந்தருள, யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணம் ஆன பெண்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பக்திபாடல்கள் பாடப்பட்டு, சுமங்கலி பூஜை நடைபெற்றது.
ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகையில் உள்ள வினைதீர்த்த மாரியம்மன் ஆலயத்தில், சிறப்பு சண்டி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து, ஆலயத்தில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஆடிமாதம் கடைசி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, ஈரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், 15 ஆயிரம் வளையல்களுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்வதால், சுமங்கலிப் பெண்களுக்கு நன்மை பயக்கும் என்பதால், ஏராளமான பெண்கள் இதில் கலந்துகொண்டனர். தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணபுரம் பிரம்மசக்தி ஆலயத்தில் சப்பரபவணியும் பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு ஊர்வலும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ம் கலசப்பாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீசஞ்சீவி வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும், நினைத்த காரியம் நிறைவேறவும் வேண்டி, 50 கிலோ அளவில் காஞ்ச மிளகாய் யாகம் நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் நாகூர் சம்பாதோட்டம் ஸ்ரீபடைவீட்டு அம்மன் ஆலய முளைப்பாரி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, 500-க்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள், வீட்டில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை ஆலயத்திற்கு எடுத்து வந்து, சிறப்பு ஆராதனைக்குப் பின், ஊர்வலமாக சென்று நீர்நிலையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சக்தி கரகம் முன்னே செல்ல, ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம், கடற்பகுதியை வந்தடைந்தது. அங்கு முளைப்பாரியை வைத்து, ஆண்களும், பெண்களும், கும்மியடித்து, குலவையிட்டு வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடலில் முளைப்பாரி விடப்பட்டது.
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பட்டு ஆடைகள் உடுத்தப்பட்ட ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் கல்குறும்பொத்தை கருங்காளியம்மன் கோவில் திருவிழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியில், பால்குட ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் நையாண்டி மேளம், மகளிர் மற்றும் ஆண்களின் சிங்காரி மேளம், பேண்ட் வாத்தியம், நாசிக்டோல், தப்பாட்டம் ஆகியன விழாவை அலங்கரித்தன. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முத்திரை சின்னமாக விளங்கும் ஆன்மிக சுற்றுலா தலமான ஸ்ரீவல்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் தேரோட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வரும் பக்தர்களின் அடிப்படைவசதிகள் குடிநீர், கழிப்பறைவசதி, போக்குவரத்து, தங்கும்விடுதி, குறித்த பாதுகாப்பு குறித்த ஆலோசனைகூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில்வைத்து மாவட்டஆட்சியர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, குற்றசெயல்கள் நடைபெறமால் தடுப்பது, மருத்துவவசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கபட்டது.