நவராத்திரி விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் கொலு கண்காட்சி களைகட்டியுள்ளது. இந்த கொலு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு இல்லத்தில் மிகச்சிறப்பான முறையில் கொலு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தியலை அடிப்படையாக கொண்டு கொலு அமைப்பது வழக்கம். இந்த ஆண்டு, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோவில்களிலும் இருக்கக்கூடிய பெருமாள் சிலைகள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு கொலுவாக வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், முப்பெரும் தேவிகளின் சிலைகளும் அதற்கு ஏற்றார் போல ஆடை அணிகலன்களும் சிறப்பாக செய்யப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டிருப்பது போல இருந்தது. ஒன்பது படிக்கட்டுகளிலும் திருமால், ஆண்டாள், அம்மன், நாயன்மார்கள், விசாகமுனிவர், நரசிம்ம அவதாரத்தின் பத்து ரூபங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதேபோல், குருபரம்பரை வைக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் ஏராளமான வீடுகளில் கொலு பொம்மை கண்காட்சி வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கல்யாண செட், கிரிக்கெட் விளையாட்டு பொம்மைகள், தசாவதார பொம்மைகள், இயற்கை விழிப்புணர்வு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள சின்னமாரியம்மன் கோயிலில் கொலு பொம்மைகள் அழகுற காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரியையொட்டி நாள்தோறும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சின்னமாரியம்மன் வைஷ்ணவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூரில் ஸ்ரீஅபயபிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் நவராத்தரியை விழாவை முன்னிட்டு நம்பெருமாள் ராமாவதார கோலத்தில் கையில் வில், பாணத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அபயபிரதான உற்சவ சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. 108 திவ்யஷேத்திரங்களுக்கு சென்று பல்வேறு கோலத்தில் பெருமாளை தரிசிக்க முடியாதவர்கள் நவராத்திரியை முன்னிட்டு பத்து நாட்கள் தொடர்ந்து பல்வேறு அலங்கார கோலத்தில் காட்சியளிக்கும் நமபெருமாளை தரிசனம் செய்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிட்டும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. ஆலயத்தில் உள்ள நவசக்தி ஜோதி விளக்கை பக்தர்கள் வழிபட்டனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூரிலுள்ள வடிவுடை அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் 2-ம் நாளான நேற்று, அம்மன் பராசக்தி அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.
பராசக்தி அலங்காரத்தில் அம்மன் நந்திவாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இசை மற்றும் பரத நாட்டியங்களில் மாணவ மாணவிகள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரியின் இரண்டாம் நாளான நேற்று, பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. இதனையொட்டி நந்தி மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-வது நாளான நேற்று, உற்சவர் மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு மலையப்ப சுவாமி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களின் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.