ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலம் - கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு
Oct 16 2018 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்றிரவு, மலையப்ப சுவாமியின் தங்க கஜ வாகனத்தில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம் மோற்சவம் கடந்த 10-ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று மாலை, உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியர்களுடன், உற்சவர் மலையப்ப சுவாமி, புஷ்பக விமான வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலையப்ப சுவாமியை புஷ்பக விமான வாகனத்தில் கண்டு தரிசித்தனர்.
புஷ்பக விமான சேவையை தொடர்ந்து, வான மண்டபத்தை அடைந்த மலையப்பசுவாமி, சர்வ அலங்கார திருக்கோலம் பூண்டு, தங்க கஜ வாகனத்தில் எழுந்தருளினார். கோவில் மாடவீதிகளில் சுவாமியின் கஜ வாகன உற்சவ சேவை நடைபெற்றது. தேவஸ்தான ஜீயர்கள் தலைமையில். நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டியினர் பிரபந்த கானம் இசைத்து முன்செல்ல, தேவஸ்தான வேத பண்டிதர்கள் நான்மறை வேதங்கள் ஓதி பின் தொடர, பஞ்ச வாத்திய முழக்கங்களுடன், பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் கண்களை கவர கோவில் மாடவீதிகளில் மலையப்ப சாமியின் கஜ வாகன உற்சவ சேவை கண்கொள்ளா காட்சியாக நடைபெற்றது.
மாடவீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் விண்ணதிர ஏழுமலையானின் கஜ வாகன சேவையை தரிசனம் செய்தனர்.