நவராத்திரி திருவிழா : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் - வீடுகளில் கொலு கண்காட்சி
Oct 17 2018 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வீடுகளில் கொலு கண்காட்சி பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கலைக்கூடம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக கொலு கண்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாடல்கள் பாடி ஆராதித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பழவந்தாங்கலில் நடைபெற்ற கொலு கண்காட்சியில், நாராயணப் பெருமாளின் 9 அவதாரங்களான கிருஷ்ண அவதாரம், வாமன அவதாரம், நரசிம்ம அவதாரம், ராம அவதாரம், கல்கி அவதாரம் உள்ளிட்டவை இடம்பெற்றன. பழங்கால பித்தளை பாத்திரங்கள் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றன. இந்த கொலு கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடியில், வீடுகளில் பெண்கள் கொலுபொம்மை கண்காட்சி வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதில் தசாவதார பொம்மைகள், கார்த்திகை பெண்கள், அழகர் ஆற்றில் இறங்குவது தேரோட்டம், இயற்கை விழிப்புனர்வு பொம்மைகள் மற்றும் பல்வேறு சுவாமி பொம்மைகள் போன்றவை இடம்பெற்றன.
நவராத்திரி பண்டிகையையொட்டி, ஈரோடு அருகே கள்ளுகடைமேடு பத்திரகாளி அம்மன் கோவிலில், 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அபிஷேக ஆராதனைக்குப் பின், துர்கை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கொலுவில், விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, கிருஷ்ணன், தசாவதாரம், பொண்ணு, மாப்பிள்ளை, கார்த்திகை பெண்கள் உள்ளிட்ட பலவிதமான நூற்றுக்கும் மேற்பட்ட கொலுபொம்மைகள் இடம் பெற்றிருந்தன. அம்மன் யானை அலங்காரத்தில் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.