சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பிறகு முதன்முறையாக நடை திறக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. சபரிமலையில் வழிபாடு செய்ய பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில், நாள்தோறும் போராட்டங்களும், கண்டன பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை நேற்று திறக்கப்பட்டுள்ளது. பரபரப்பான சபரிமலை தீர்ப்புக்கு பிறகு முதன்முறையாக நடை திறக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, நேற்று மாலை 5 மணியளவில் 18 படிகள் வழியாக, சன்னிதானம் அருகே பக்தர்கள் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டது. மேலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெண் பக்தர்களும், தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில் தலைமை தற்திரி கண்டராரு ராஜீவரு பூஜைகள் மேற்கொண்டார்.
முன்னதாக, ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களை, சபரிமலையின் அடிவாரமான நிலக்கல் பகுதியிலேயே, இந்து அமைப்புகள் தடுத்து நிறுத்தியதால், பதற்றம் அதிகரித்தது. சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களின் பாதுகாப்புக்காக நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை சன்னிதானம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
பெண்கள் சபரிமலைக்கு செல்வதை நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, காவல்துறை வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்ததையடுத்து, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
நிலக்கலில்லில் பெண் பக்தர்களுக்கு எதிராக 10 ஆயிரத்தும் அதிகமான எதிர்ப்பாளர்கள் குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதையடுத்து, நிலமையை கட்டுக்குள் கொண்டு வர கமாண்டோ படை வரவழைக்கப்பட்டது. சபரிமலையில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண் நிருபர் மீது தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அவரது வாகனத்தை எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கினர்.
இதேபோல் கேரள அரசுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட பேருந்துகளும் பல இடங்களில் போராட்டக்காரர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டன. நிலைமை மோசமானதால், சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் இன்று வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.