நாடுமுழுவதும் விஜயதசமி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் : அரிசியில் அகரம் எழுத வைத்து குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி தொடக்கம்
Oct 19 2018 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடுமுழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரிசியில் அகர முதல எழுத்துகளை எழுத வைத்து குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை தொடங்கி வைத்தனர்.
நவராத்திரி விழாவின் 10ம்நாளான இன்று விஜயதசமி விழாவாக நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் சரஸ்வதி உள்ளிட்ட தேவி ஆலயங்களில் குழந்தைகளுக்கான கல்வி தொடங்கும் வகையில், ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மங்கலகரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. பெற்றோர்கள் நீண்டவரிசையில் அமர்ந்து குழந்தைகளின் கையைப் பிடித்து அரிசியில் 'அ' எழுத்தை எழுத சொல்லிக்கொடுத்தனர். நோட்டுப் புத்தகங்களிலும் குழந்தைகள் முதன்முறையாக எழுத கற்றுக் கொண்டனர்.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரா கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில் கோயில் குருக்கள் குழந்தைகளின் நாவில் தங்க ஊசியில் எழுதியும், குழந்தைகளின் கை விரல்களைக் கொண்டு பச்சரிசியில் அகரமுதல எழுத்துகளை எழுதச் செய்தும் ஆரம்ப கல்வியை தொடங்கி வைத்தனர்.
கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கு நாவில் பெயர் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்வில், நாவில் ஓம் ஹரி மற்றும் அரிசியில் 'அ, ஆ' என்று எழுத கற்றுக்கொடுக்கப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் எழுது பொருட்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகரில் உள்ள செடல் மாரியம்மன் ஆலயத்தில் அம்மன் சன்னதியில் எழுத்தறிவித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள், குழந்தைகளுக்கு நெல்லில் 'அ' என்ற எழுத்தை எழுத வைத்து ஆசி வழங்கினார்.
கும்பகோணத்தில் உள்ள பள்ளிகளில் வித்யாரம் என்றும், அட்சர அப்யாசம் என்றும் அழைக்கப்படும் கல்வியை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு நாவில் நெல்மணியை இட்டு அகரம் எழுதினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மாலை அணிவிக்கப்பட்டது.