திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றம் - அண்ணாமலையாரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
Nov 23 2018 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, இன்று மாலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மகா தீபத்தை மனமுருக தரிசித்தனர். தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் போற்றப்படும் உலகப்பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான இன்று அதிகாலை, சுவாமி - அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, கோயில் கருவறை முன்பு உள்ள பிரதோஷ நந்தி சிலை அருகில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதற்காக 6 அடி உயரமுள்ள கொப்பரை, நேற்று, மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக மூவாயிரத்து 500 கிலோ நெய் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் பருத்தி துணி ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டன. அண்ணாமலையார் கோயிலிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்திருளினர். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சில நொடிகள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளித்தார். பின்பு சரியாக 6 மணி அளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகாதீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்து, அண்ணாமலையானுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். இன்று ஏற்றப்படும் மகா தீபமானது 11 நாட்கள் மலையில் பிரகாசிக்கும். தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.