பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசத் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைப்பூசத் திருவிழாவையொட்டி, நேற்று முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தக்குளத்தில் மின்விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மாரியம்மன் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பமானது தீர்த்தக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பின்னர் அம்மன் மூலஸ்தானத்திற்குச் சென்றடைந்தார். இந்த தெப்ப திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட லெட்சுமண தீர்த்த குளத்தில் தை பூசத்தை முன்னிட்டு, இராமநாதசுவாமி ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தெப்ப உற்சவம் நடைபெற்றது. சுவாமி அம்பாள் தெப்ப குளத்தில் 11 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகளும் கலந்துகொண்டு தெப்பத்தை கண்டு தரிசித்தனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறமுள்ள முத்தழகு பட்டியில் அமைந்துள்ள மகா கணபதி, பாலமுருகன், வெள்ளச்சி அம்மன், சங்கிலி கருப்பு ஆகிய தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன் தினம் சனிக்கிழமை மகா கணபதி, லட்சுமி, சுதர்சன, நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது. நேற்று யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலஸ்தான தெய்வங்களுக்கு புனிதநீர் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத், தாமிரபரணி புஷ்கர விழா குழு ஸ்ரீ ஜெயேந்திர பொன்விழா மேல்நிலைப்பள்ளி, இணைந்து இல்லங்களை இனிமையாகும் சகல சௌபாக்கியங்களும் தரும் ஸ்ரீ சத்ய நாராயண பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5 ஆயிரம் தம்பதிகள் பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூர் அருள்மிகு பத்திர காளியம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பார்வதீஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது. பூஜிக்கப்பட்ட குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இவ்விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அருகே ஊசுடு தொகுதிக்குட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில், புதிதாக 25 அடி உயர அருள்மிகு ஸ்ரீ மகாகாளி அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. யாகசாலை பூஜையில் வைக்கப்பட்ட புனிதநீர் கொண்டுவரப்பட்டு 25 அடி உயர அருள்மிகு மகாகாளி அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலையின் மேல் ஊற்றப்பட்டது. வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.