திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
Feb 11 2019 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ்பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் 1 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்காலத்தில் இருந்ததுபோன்று, பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து 8ம் கால யாகபூஜை இன்று காலை நிறைவடைந்தது. இதையடுத்து மேளதாள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த புனித நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து பிரகாரம் சுற்றி வந்து பின்னர் கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடைபெற்றுள்ள இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை தொடர்ந்து சனீஸ்வர பகவான் மேஷ ராசி முதல் மீன ராசி வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் நற்பயன்களை வழங்குவார் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கும்பாபிஷேகத்தையொட்டி இன்று ஒருநாள் காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.