திருச்சி, கும்பகோணம் உட்பட தமிழகத்தின் பல்வேறு திருத்தலங்களில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருதேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைகோட்டில் உள்ள பழைமை வாய்ந்த புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோவிலில், 3 ஆயிரத்து 8 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. மகாமகத் திருக்குளத்தில் வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீமங்களாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தெப்பத் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு முப்பெரும் தேவியர்களை தரிசனம் செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித்தேர் திருவிழா உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 8ம் நாளான நேற்று நம்பெருமாள், கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்திற்கு வந்தடைந்தார். பின்னர் மாலை, மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் பங்குனி தெப்பத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தாயுமானவர் சுவாமி, மட்டுவார் குலழி அம்பாளுடன், வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீதி உலா வந்து தெப்பதீர்த்தக்குளத்தை வந்தடைந்து, அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அருள்பாலித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலை மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். அங்கு வேதியர்கள் யாகம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்க திருமண வைபவம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று மாலை வடக்குரத வீதி தேரடியில் நடைபெறுகிறது.
நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு செங்கோல் வழங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணியில் உள்ள ஸ்ரீஅமிர்தநாயகி சமேத ஸ்ரீநாகநாதர் ஆலயத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீநாகநாதர் சுவாமியுடன், அமிர்தநாயகி அம்பாள், மணமேடையில் மணமக்களாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் கங்கை முத்து மாரியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் முத்தியால்பேட்டை, சோலைநகர், சோலைதாண்டவன் குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.