தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் சித்திரை திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Apr 18 2019 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூரில், அபிராமி அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேர்த் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் சமேதராய் எழுந்தருளினார். தொடர்ந்து, சிறப்பு தீபாதரனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான மக்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கனக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரெணகாளியம்மன் கோயிலில், சித்திரைத் திருவிழாவையொட்டி, தங்கரதத்தில் அருள்மிகு ரெணகாளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து வீதிஉலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று சண்முகநதி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு மகா அபிஷேகமும், முளைப்பாரி சகிதமாக சக்திகரகம் கங்கையில் விடுதலும் நடைபெறுகிறது. நாளை அன்னதானமும், நாளை மறுநாள் கோயில் வளாகத்தில் உள்ள ரெணகருப்பணசாமிக்கும், ரெணமுனிக்கும் அபிஷேக, ஆராதனையும் நடைபெறவுள்ளது.
பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில், கடந்த வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இலக்குமி சமேதர் நாராயணப் பெருமாளுக்கு வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு, நகைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டர்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து வீசுதல் போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பட்டர்கள் நடனமாடியபடியே மாலைகள் மாற்றினர். நாளை சித்திரைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிவாலயமான திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில், நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், நெய், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலில் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.