தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் வைகாசி திருவிழா - சுவாமிகள் வீதிஉலா : பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன்
May 28 2019 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல்வேறு ஆலங்களில் வைகாசி திருவிழாவையொட்டி நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருச்சி மாநகர் கருமண்டபம் பகுதியில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி ஆண்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் மற்றும் கரகஉற்சவம் வைபவம் நடைபெற்றது. முன்னதாக கோரையாற்றிலிருந்து ஆயிரத்து எட்டு பால்குடங்களை பக்தர்கள் தங்களது தலையில் சுமந்தும், அலகுகுத்தி, கரகம் எடுத்தும் பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த நைனிகட்டளை கிராமத்தில் பழைமை வாய்ந்த முனீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழாவையொட்டி, முனீஸ்வரர், சடைஸ்வரர் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்த வீதியுலா ஊர்வலத்தில். மேளதாளங்கள் முழங்க, பாரம்பரிய பச்சைகாளி பவளகாளி வேடமனிந்து நடைபெற்ற நடனங்கள் அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
நாகை மாவட்டம், தாணிக்கோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதை அம்மன் கோவில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தீ மிதியல் உற்சவம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மஞ்சள் ஆடை அணிந்து விரதமிருந்து பெண்கள் உட்பட 50 பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பொன்னூரில் பழைமை வாய்ந்த சீதளாதேவி அம்மன் ஆலயத்தில், வைகாசித் திருவிழாவையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தன. விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.