தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் ஆடி மாதத்தையொட்டி நடைபெற்ற திருவிழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
Aug 12 2019 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியை அடுத்த மாத்தூரில் செல்வமாரியம்மன் கோயிலில் 11-ம் ஆண்டு தீமிதித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, கைனாங்கரை குளத்தில் இருந்து பால்குடம், அக்னிச்சட்டி சுமந்தபடி 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்குச் சென்று, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள் கோயில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆண்டாள் மற்றும் பெருமாள் எழுந்தருள, திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை அருகே பேரையூர் நாகநாதசுவாமி ஆலயத்தில் 20-ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் வழிபடுவோருக்கு திருமண தடை நீங்குவதுடன், பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூரை அடுத்துள்ள நெரூர் அக்னீஸ்வரர் கோயிலில், உலக நன்மை வேண்டி, நாதஸ்வர உற்சவ பெருவிழா நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்கள் பங்கேற்று நாதமழை பொழிந்தனர். தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
சென்னை மாங்காடு அடுத்த ஐயப்பந்தாங்கலில் உள்ள துர்க்கையம்மன் ஆலயத்தில், 33-ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தும், இயந்திர வாகனத்தில் ஊக்கில் தொங்கியபடியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் துர்க்கை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
சென்னைகுரோம்பேட்டையிலுள்ள ஜாய் நகர் ஸ்ரீசந்தியம்மன் ஆலயத்தில், 27-ம் ஆண்டு ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பல்லாவரம் நகரக்கழகம் சார்பில், அம்மனுக்கு கூழ்வைத்து படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாவரம் நகரக் கழக துணைச் செயலாளர் திரு.கே.வி. ஆனந்த் குமார், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ம. கரிகாலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் உள்ள, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை அணிந்தபடி கஞ்சிக்கலயம் சுமந்து ஆட்டம் பாட்டத்துடன் பாதயாத்திரை சென்றனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.