அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான இன்று, அத்திவரதரை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - அத்திவரதரை நாளை குளத்தில் மீண்டும் வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Aug 17 2019 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாள் இன்று என்பதால், அத்திவரதரை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், அத்திவரதரை குளத்தில் மீண்டும் வைப்பதற்கான நடைமுறைகள் நாளை தொடங்கவுள்ளது.
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் அத்திவரதர், கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதிமுதல் 31-ம் தேதிவரை சயனக் கோலத்திலும், பின்னர், ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் இன்றுவரை நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார். இன்று அத்திவரதர், ரோஜா மற்றும் மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து, மல்லிகை, முல்லை, ரோஜா உள்ளிட்ட பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். இன்று VVIP, VIP பாஸ்கள் ரத்து செய்யப்பட்டு பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. எப்படியாவது இன்றைக்குள் அத்திவரதரை தரிசனம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் பக்தர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது.
வரதராஜபெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், நாளை, அத்திவரதர் வைக்கப்பட உள்ளதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா தெரிவித்துள்ளார். மேலும், அனந்தசரஸ் திருக்குளத்தை, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.