தஞ்சை பெரிய கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்த மர்ம நபர்கள் - திருப்பணி நடைபெறும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி
Aug 20 2019 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை பெரிய கோயிலை, உரிய அனுமதியின்றி மர்ம நபர்கள் டிரோன் மூலம் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டதால் மீண்டும், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை, இந்திய தொல்லியல் துறை, அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை இணைந்து முடிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையுடன் திருப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக வாட்ஸ் அப்பில் பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. மேலும் தஞ்சை பெரியகோவிலை டிரோன் மூலம் மர்மநபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் ராஜகோபுர கலசத்தில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் நடைபெறும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளதால், அதிகாரிகள் அதிர்ச்சிடைந்துள்ளனர். உரிய அனுமதியின்றி டிரோன் மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதால், தஞ்சை பெரியகோவிலின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.