கிருஷ்ணன்-ராதை வேடம் அணிந்து கோகுலாஷ்டமி கொண்டாட்டம் - மாறு வேடப் போட்டிகளில் குழந்தைகள் ஆர்வமுடம் பங்கேற்பு
Aug 23 2019 9:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் தரித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் சம்மந்தம் நகரில் அமைந்துள்ள விவேகானந்த மெட்ரிக் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து வந்திருந்தனர். மேலும், கண்ணன் புராணம், சிறுசிறு கதைகள், கோலாட்டம், பஜனை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளிலும் அவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில், அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாணவ-மாணவிகள் கிருஷ்ணரைப் போன்று வேடமிட்டும், தசாவதார கதாபாத்திரங்களிலும் மேடையில் தோன்றி பக்தி பரவசத்தினை ஏற்படுத்தினர்.
அரியலூரில் உள்ள தனியார் நர்சரி பள்ளி மாணாக்கர்கள், கிருஷ்ணன், ராதை மற்றும் ஆயக்குல பெண்கள் போன்று வேடமணிந்து கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடினர். மேலும், மாணவ,மாணவிகளுக்கு கிருஷ்ணர் விரும்பி உண்ணக்கூடிய வெண்ணையினால் செய்த திண்பண்டங்கள், பள்ளி சார்பில் வழங்கப்பட்டன.
திருச்சியில், தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன.