புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்ட தமிழகத்தின் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன
Sep 21 2019 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் திருவெற்றியூர் காலடிப்பேட்டை கல்யாணவரதராஜர் பெருமாள் ஆலயத்தில், மூலவருக்கு விஷேச முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் பவளவண்ண பெருமாள் மற்றும் ஸ்ரீ தேவி பூதேவி ஆண்டாள் தாயாருக்கு, 18 கிலோ எடையுள்ள முந்திரி மற்றும் பழங்களால் ஆன மாலை மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி ஆலயம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தங்களது நேர்த்தி கடனாக பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் ஏராளமானோர் பெருமாளை தரிசனம் செய்தனர். 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பெருந்தேவி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி வரதராஜ பெருமாள் ஆலயத்தில், பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றன. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஆலயத்தில், விவசாயம் செழிக்க பக்தர்கள் நவதானியங்களை காணிக்கையாக செலுத்தி, வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து பெருமாளை வழிபட்டனர்.