கந்த சஷ்டியையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி- தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை
Nov 2 2019 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுவதை யொட்டி, அங்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அழகன் என்றும் ஆறுமுகத்தான் என்று போற்றப்படும் தமிழ்கடவுளான முருகக் கடவுளின் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்குகிறது. இக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 28 ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதலில் விஸ்வரூப தரிசனமும், உதயமார்தாண்ட அபிஷேகமும், பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதன் பின்னர் இன்று மாலை, சுவாமி ஜெயந்திநாதர் கோவில் கடற்கரை திடலில் எழுந்தருள, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்சி நடைபெறுகிறது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.
நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில், சூரசம்ஹார விழா கடந்த 28ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் சக்தி வேல்வாங்கும் நிகழ்ச்சி மற்றும் வேர்வை சிந்தும் அபூர்வ நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அதேசமயம் மூலவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணியசுவாமி, கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சூரனை வதம் செய்ய கேவர்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்கப்பட்டது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெற்ற வேல் வாங்கும் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.