தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில், சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான, முருகன் - வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது, முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ய கோவில் கடற்கரை திடலில் எழுந்தருளினார். யானை முகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்க முகம் கொண்ட சூரனையும் வேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்தார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல், நெல்லை மாவட்டம், தென்காசி பகுதிகளில் அமைந்துள்ள பாவூர்சத்திரம், ஆய்க்குடி, இலஞ்சி, குற்றாலம், தென்காசி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ஸத்புத்ரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு, கந்த சஷ்டியை முன்னிட்டு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண, பரங்கிப்பேட்டை, கிள்ளை, கீரைப்பாளையம், புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
இதே போல், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில், பாலசுப்பிரமணியர் மரக் கேடயத்தில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் சூரனை துரத்தி வந்து, வடக்கு ரத வீதியில் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில், நாகராஜா கோவிலில் உள்ள பால முருகன், மருங்கூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய முருகன் கோவிகளில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர் உடனுறை அபிராமி அம்மன் திருக்கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, 4-ம் படை வீடான கும்பகோணம் அருகே சுவாமிமலையில், ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அம்பாளிடம் வேல் வாங்கி ஷண்முகர், சூரனை வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஷண்முகரை தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி - வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் இன்று பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெற உள்ளது.