ஐப்பசி மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு, பல்வேறு சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலில், மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம்பெருமானுக்கு சந்தனம், பால், தயிர், அரிசிமாபொடி உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பல்வேறு வண்ண மலர்களால் நந்தியம்பெருமான் அலங்கரிக்கப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு, ஐப்பசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், சீக்காய், தயிர், பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல், அரியலூர் மாவட்டம், சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில், நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. மகா பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம், கீழப்பழுவூர் ஆலந்துறையார் காமரசவல்லி கார்கோடேஸ்வரர் வேதபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில், சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு, பால் பன்னீர், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் கோவிலில், பிரதோஷ தினத்தை முன்னிட்டு, ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.