திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் உற்சவம் : பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள்
Dec 4 2019 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்போது 3-ம் நாள் உற்சவத்தில், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாடவீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் 3ம் நாளான நேற்றிரவு, அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், முருகர், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு அண்ணாமலையார் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ராஜகோபுரம் முன்பு உள்ள பதினாறு கால் மண்டபத்தில் அண்ணாமலையார் மற்றும் அம்மன், வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சிம்ம வாகனத்திலும், பராசக்தி அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.