தமிழகத்தில் பல்வேறு திருக்கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கார்திகை தீப திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் நாரணி தீபம் காட்டப்பட்டதுடன், கோயில் கடற்கரை முன்பு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் திருக்கோயில் எதிரே உள்ள பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கமிட்டபடி வணங்கினர். மாடவீதியில் சொக்கபனையில் நெய்தீபம் ஏற்றி வைத்து, உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளுக்கு கார்த்திகை ருத்ர தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு கார்த்திகை சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சொக்கப்பனை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சொக்கப்பனை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக, கோயிலில் இருந்து சுவாமி பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. மாலை, கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு கோயில் மேல்சாந்தி ராதாகிருஷ்ணன், தனிப்படகில் சென்று பூக்களால் அலங்கரித்து பூஜைகள் செய்து கார்த்திகை மகாதீபம் ஏற்றினார். இந்நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.