அரியக்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு : 12 காளைகள், 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு
Aug 6 2018 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்குடி அருகே அரியக்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இப்போட்டியில் 12 காளைகளும், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனர். இதில் மாடுகள் முட்டியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்துள்ள அரியக்குடியில் அமைந்துள்ள, ஸ்ரீ தாமணி செல்ல அய்யனார் கோவிலில், 12-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறந்த 12 காளைகள் பங்கேற்றன. காளைகளை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் கலந்துகொண்டனர். மஞ்சுவிரட்டு திடலில் ஒவ்வொரு காளைகள் விளையாடுவதற்கும் 25 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டன. இதில் 8 காளைகள் பிடி காளைகளாக அறிவிக்கப்பட்டு மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டியின் போது காளைகளை பிடிக்க முயன்ற 6 மாடுபிடி வீரர்களுக்கு, மாடுகள் முட்டியதில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை, சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் உற்சாகமாக கண்டுகளித்தனர்.