நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் - இந்திய அணியில் இடம்பிடித்தார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்
Jan 13 2020 9:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.
இந்த மாதம் இறுதியில், நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, 5 டி20 கிரிக்கெட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில், துணைக் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், ஸ்ரோயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், சிவம் துபே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும், பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாகல், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, வரும் 24-ம் தேதி, ஆக்லாந்தில், இந்திய நேரப்படி, மதியம் 12 முப்பது மணிக்கு தொடங்குகிறது.