ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்
Feb 28 2020 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவில், ஏழாவது மகளிர் டி-20 உலக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சோபி டிவைன், இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில், 16 வயதே ஆகும் இளம் வீராங்கனை ஷபாலி வெர்மா அதிரடியாக ஆடி 34 பந்துகளில், 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா 11 ரன்களிலும், தனியா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 1 ரன்னிலும் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 133 ரன்கள் எடுத்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், ராகெல் 12 ரன்களிலும், கேப்டன் சோபி டிவைன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஜென்சன் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.
இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஷபாலி வெர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், 'ஏ' பிரிவில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, 6 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.