கொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வார்னர் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலிக்கும் பரிந்துரை
Apr 1 2020 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களை பாராட்டும் விதமாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை, 19 பேர் பலியாகியுள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்த, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்பு துறையினர் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு புதுவிதமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், தனக்கு தானே மொட்டை அடித்துக் கொண்ட வீடியோவையும், படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'தனக்கு அளித்த பரிந்துரையை ஏற்று, கொரோனா வைரசுக்கு எதிராக, முன்னணியில் இருந்து போராடும் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இதனை செய்துள்ளதாகவும், இது நன்றாக உள்ளதா? இல்லையா?' என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், கம்மின்ஸ், ஸ்டொய்னிஸ் உள்ளிட்ட பல வீரர்களையும் மொட்டை அடிக்க பரிந்துரை செய்துள்ளார்.