கொரோனா வைரஸ் எதிரொலி - ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைப்பு
Jul 21 2020 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐ.சி.சி., டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளிப்படையாக கடந்த மாதமே தெரிவித்து விட்டது. ஆனால், ஐ.சி.சி., நிர்வாகம் இது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் இருந்தது. இந்நிலையில் ஐ.சி.சி., உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2020-ம் ஆண்டு நடைபெறவிருந்த டி20 ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஒத்தி வைப்பதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ஐ.சி.சி., டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், 2021-ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 14-ம் தேதி நடக்கும் என்றும், 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ம் தேதி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், இந்தியாவில் அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ம் தேதி நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.