ஐ.பி.எல். 2020 போட்டியில் பி.சி.சி.ஐ - விவோ நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் ரத்து
Aug 6 2020 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில், பி.சி.சி.ஐ - விவோ நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளை பி.சி.சி.ஐ. நடத்தி வருகிறது. 2018-ம் ஆண்டில் இருந்து, 2022-ம் ஆண்டு வரையிலான போட்டிகளுக்கு சீன நிறுவனமான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பெற்றிருந்தது. 2 ஆயிரத்து 199 கோடி ரூபாய்க்கான இந்த ஒப்பந்தத்தின் மூலம், வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை பிசிசிஐ-க்கு வருமானம் கிடைத்து வந்தது.
லடாக்கில் சீன ராணுவத்துடனான மோதலுக்குப் பிறகு சீன தயாரிப்பு பெருட்களையும், சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் சீன செயலிகளான டிக்-டாக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. மேலும் சீனாவுடனான பல தொழில் ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் ஐ.பி.எல். போட்டிகளில், டைட்டில் ஸ்பான்சரான விவோ உள்ளிட்ட சீன ஸ்பான்சர்கள் தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகுவதாக, விவோ நிறுவனம் கடந்த 4-ம் தேதி அறிவித்தது. தற்போது, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில், பி.சி.சி.ஐ. - விவோ நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவோவின் ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், அடுத்த இரு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.