ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் - 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது மும்பை அணி
Sep 24 2020 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில், 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை மும்பை அணி வீழ்த்தி, தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டிகாக் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா - சூர்யகுமார் யாதவ் ஜோடி, கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 47 ரன்களில் சூர்யகுமார் யாதவ் ரன் அவுட்டானார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, 54 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 195 ரன்கள் எடுத்தது.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில், சுனில் நரைன் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்களிலும், ராணா 24 ரன்களிலும், ரசல் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி தரப்பில், பும்ரா, பேட்டின்சன், டிரென்ட் பவுல்ட், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.