ஐபிஎல் கிரிக்கெட்டில் மீண்டும் தடுமாறிய சென்னை அணி - 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வி
Sep 26 2020 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில்
44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை தழுவியது.
துபாயில் நடந்த லீக் போட்டியில், 'டாஸ்' வென்ற சென்னை அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ஷிகார் தவான் 35 ரன்களுடனும், பிரித்வி ஷா 43 பந்தில் 64 ரன்களும் அடித்து வலுவான தொடக்கத்தை அளித்தனர். பின்னர் இறங்கிய ஸ்ரேயாஸ் 26 ரன்களில் பெவிலியன் திரும்ப, 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 37 ரன்களுடன் ரிஷாப் பன்ட் மற்றும் 5 ரன்களுடன் ஸ்டாய்னிஸ் களத்தில் இருந்தனர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர்களான முரளி விஜய் 10 ரன்னிலும், வாட்சன் 14 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். டெல்லி அணியின் கட்டுகோப்பான பந்துவீச்சும், அதிரடியான பீல்டிங்கையும் சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து வந்த வீரர்கள் தடுமாறினர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஆகியோர், டெல்லி பந்துவீச்சை ஓரளவுக்கு சமாளித்து விளையாடினர். டூ பிளசிஸ் 43 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 26 ரன்களுடனும், தோனி 15 ரன்களுடனும் ஆட்டமிழக்க இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.