ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டம் - சென்னை அணியை வென்றது ராஜஸ்தான்
Oct 20 2020 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் விளையாடிய சென்னை அணியில், 10 ரன்களில் ஆட்டமிழந்து டு பிளசிஸ் அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் களமிறங்கிய வாட்சன், 8 ரன்களிலும், சாம் கரன் 22 ரன்களிலும், ராயுடு 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனியுடன் கைகோர்த்த ஜடேஜா, நிதானமாக ஆடினார். தோனி 28 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில், பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். சாம்சன், உத்தப்பா ஆகியோரும் விரைவில் ஆட்டமிழந்தனர். 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் கூட்டணி சேர்ந்த கேப்டன் ஸ்மித் - ஜாஸ் பட்லர், நிதானமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர். அபாரமாக விளையாடிய பட்லர், 70 ரன்களும், ஸ்மித் 26 ரன்களும் எடுத்தனர். 17 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு ராஜஸ்தான் முன்னேறியுள்ளது. கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது.