ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில், சென்னை அணி த்ரில் வெற்றி - கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஜடேஜா அபாரம்
Oct 30 2020 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில், சென்னை அணி வென்றது.
துபாயில் நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் 26 ரன்னிலும், சுனில் நரைன் 7 ரன்னிலும், ரிங்கு சிங் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு பக்கம் விக்கெட் விழ, மறுமுனையில் நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 61 பந்தில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்திருந்தபோது, வாட்சன் 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ராயுடு 38 ரன்னில் ஆட்டமிழக்க, கெயிக்வாட் பொறுப்புடன் விளையாடி, 72 ரன்னில் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, அடுத்து ஜோடி சேர்ந்த சாம் கர்ரன், ஜடேஜா ஜோடி, பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதிப் பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க, சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 31 ரன்னும், சாம் கர்ரன் 13 ரன்னும் அடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனிடையே, அபுதாபியில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில்,
பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.