இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் - பிரிஸ்பேனில் நாளை இரண்டு அணிகளும் மோதல்
Jan 14 2021 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளதால், 11 பேர் கொண்ட அணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில், சிட்னியில் நடைபெற்ற போட்டி, இந்திய வீரர்கள் புஜாரா, ரிஷப் பந்த், அஸ்வின், விகாரி ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் டிரா ஆனது. இந்நிலையில், டெஸ்ட் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை ஐந்து முப்பது மணிக்குத் தொடங்குகிறது. வழக்கமாக, போட்டி தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, ஆடும் லெவன் அணியை இந்திய அணி அறிவிக்கும். ஆனால் தற்போது வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், நான்காவது போட்டியில் களமிறங்கும் அணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு நாளைய போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.