இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அஹமதாபாத்தில், நாளை தொடக்கம்
Feb 23 2021 6:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அஹமதாபாத்தில், நாளை தொடங்குகிறது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில், பகல்-இரவாக போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.
ரசிகர்களை ஈர்க்கவும், போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 15 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதிகபட்சமாக, ஆஸ்திரேலிய அணி 8 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக உள்ளது.
இதுவரை 3 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 2 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி, பங்களாதேஷுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க, இந்த டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இரு அணிகளும் களமிறங்க உள்ளதால், இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.