இங்கிலாந்துக்கு எதிரான 3-வது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
Feb 26 2021 10:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்துக்கு எதிரான 3வது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக தொடங்கியது. போட்டியின் முதல் நாளான நேற்று முன் தினம், முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, 66 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 145 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்சர் படேல் 5 விக்கெட்டுகள், அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில், 400 விக்கெட்டுகள் எடுத்த 4வது இந்தியர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றார். 49 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணி, 7 புள்ளி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து வெளியேறியது. 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியை தவிர்த்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.