மும்பையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? - மைதான ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பரவியதால் சிக்கல்
Apr 4 2021 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. கொரோனா அச்சம் காரணமாக, சென்னை, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா ஆகிய 6 நகரங்களில் மட்டுமே இந்த முறை ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் மட்டும் 10 போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், மைதான ஊழியர்கள் 10 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ நிர்வாகம் விரும்பவில்லை என கூறப்படுகிறது. மும்பைக்குப் பதிலாக, மத்திய பிரதேசத்தின் இந்தூர், தெலங்கானாவின் ஐதராபாத் ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கும் பிசிசிஐ ஏற்பாடுகளை செய்து வருகிறது. எனினும், மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக, மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.