ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச் : தாய் நாடான செர்பியா வந்தடைந்தார்
Jan 18 2022 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரபல டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், தனது தாய் நாட்டை அடைந்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக நோவாக் ஜோக்கோவிச் கடந்த வாரம் புதன்கிழமையன்று மெல்பெர்ன் நகருக்குச் சென்றார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பதால், தமக்கு மருத்துவ விலக்கு இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் மெல்பெர்னை அடைந்தவுடன், அவருக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த மருத்துவ விலக்கு, ஆஸ்திரேலிய சட்டப்படி செல்லத்தக்கதல்ல என அறிவித்து, அவரது விசாவை அந்நாட்டு குடியேற்றத் துறை ரத்து செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு ஜோகோவிச் சென்ற நிலையில், ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் இரண்டாவது முறையாக விசாவை அந்நாட்டு அரசு ரத்து செய்த போது, நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியது. இதனால், அவர் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, விமானம் மூலம் துபாய் வந்த ஜோக்கோவிச், பின்னர் அங்கிருந்து தாய் நாடான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடுக்கு வந்தடைந்தார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் அவர் பங்கேற்காததால், அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் அவர் பங்கேற்கத் தடையேதும் இருக்காது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசான் அறிவித்துள்ளார். ஆனால், அவருக்கு மூன்றாண்டுகளுக்கு ஆஸ்திரேலியா விசா அளிக்க முடியாது என்பதே தற்போதைய நிலை.